Press Release
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை
Federation Tamil Sangams of North America
தமிழ்த் திருவிழா 2010
வட அமெரிக்காவில் இருக்கிற தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பான, வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA)யானது, கடந்த இருபத்து மூன்று ஆண்டுகளாக ஆண்டுதோறும் ஜூலை முதல்வாரத்தில் தமிழ்த் திருவிழாவை நடத்தி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் சூலை மாதத்தில் வரும் அமெரிக்க சுதந்திர தின விழா விடுமுறையின்போது நடக்கும் இந்தத் தமிழ் விழா ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு மாநிலத்தில் நடைபெறும்.
அதன்படி, இவ்வாண்டும் அமெரிக்க ஐக்கிய மாகாணங்களின் வடகிழக்கு மாகாணத்துள் ஒன்றான கனெக்டிக்கெட்டில் இருக்கிற வாட்டர்பரி எனும் நகரத்தில் சூலை இரண்டாந்தேதி துவங்கி சூலை ஐந்தாம் தேதி வரையிலும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அமெரிக்கா மற்றும் கனடாவில் இருந்து பெருமளவிளான தமிழர்கள் கலந்துகொண்டு, அமெரிக்க மண்ணில் தமிழால் கூடி, பேசி, மகிழ்ந்து,சுவாசித்து, தமிழ் உணர்வோடு வீடு திரும்பினார்கள்.
இந்தத் தமிழ் விழாவிற்குக் கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். அதுமட்டுமல்ல, குறைந்தது ஐம்பது குடும்பங்கள் இரவு பகல் பாராமல் இந்த விழாவைச் சிறப்பாக நடத்தத் தங்களை அர்ப்பணித்துக் கொள்வார்கள். ஒவ்வொரு விழாவிற்கும் நல்லதொரு தலைப்பை விழாக்குழு தீர்மானிக்கும். இந்த ஆண்டு தமிழர் விழாவின் தலைப்பு "செந்தமிழால் சேர்ந்திணைவோம்! செயல்பட்டே இனம் காப்போம்!!” என்பதாகும்.
இந்தத் தலைப்பிற்கு ஏற்பவும், தமிழ் மக்கள் தமது தமிழுணர்வை மேம்படுத்திக் கொள்வதற்கும், உரிமையை நிலை நாட்டுவதற்கும் ஏதுவாகவும் விழா நிகழ்ச்சிகள் அமைந்தன. வழக்கம்போலவே இவ்வாண்டுக்கான தமிழர் விழாவும், தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் அமெரிக்க தேசிய கீதத்துடன் இனிதே தொடங்கியது. பேரவைத் தலைவர் முனைவர் முத்துவேல் செல்லையா மற்றும் விழா ஒருங்கிணைப்பாளர் முனைவர் பழனி சுந்தரம் ஆகியோர் வரவேற்புரை நிகழ்த்தி, விழாவுக்கு முன்னிலை வகித்ட்துச் செயல்பட்டனர். அமெரிக்காவில் இருக்கும் கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேலான தமிழ்ச் சங்கங்களைச் சார்ந்த தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டு, ஆடல், பாடல், நாடகம் எனப் பலவகையில் கண்களுக்கும் செவிகளுக்கும் விருந்தளித்தனர்.
சூலை இரண்டாம் தேதியே, முன் வாயிலும் அரங்க மேடையும் விருந்தினர்களை வரவேற்கக் காத்திருந்தது. தன்னார்வத் தொண்டர்கள் முன்வாயிலையும், அரங்க முகப்பையும் அழகாகச் சித்தரித்து எழிலுறச் செய்திருந்தனர். முக்கிய விருந்தினர்களாக, பேராசிரியர் பர்வீன் சுல்தானா, தோழர் தியாகு, கவிஞர் தாமரை, பேரூர் அடிகளார், வாட்டர்பெரி நகர மேயர் மைக்கேல் ஜரிஜுரா, மாகாண அரசு சட்ட்த்தரணி ரிச்சர்டு ப்லுமேந்த்தால், இயக்குனர் பாரதிராஜா, நடிகர் விக்ரம், நடிகர் சந்தானம், நடிகைகள் ப்ரியாமணி மற்றும் இலட்சுமி ராய் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
முனைவர் பர்வீன் சுல்தான அவரிகளின், மண் பயனுற வேண்டும் என்கிற தலைப்பில் அமைந்த சொற்பொழிவு, பனைநிலம் தமிழ்ச் சங்கம் வழங்கிய ‘யார் தமிழர்?’ எனும் தலைப்பில் தெருக்கூத்து, "வேர்கள் தமிழில், விழுதுகள் உலகெங்கும்" எனும் தலைப்பில் கவிஞர் தாமரை அவர்களின் தலைமையில் இடம் பெற்ற கவியரங்கம், "எங்கிருந்தோ வந்தாள்" எனும் தலைப்பில் இடம் பெற்ற நாடகம் முதலானவை வந்தோரைக் களிப்பிலும் சிந்தனையூட்டுவதிலும் ஆழ்த்தியது.
முதல்நாள் மாலையில் இடம் பெற்ற, பேராசிரியர் ப்ரான்சிஸ் பாயில், பேராசிரியர் அடேல் பார்க்கர், மருத்துவர் அலென் ஷாண்டர், இயக்குனர் பாரதிராஜா ஆகியோரது பேச்சு தமிழர் இன உணர்வை ஊட்டி, பல அரிய தகவல்களைக் கொடுத்து விழாவுக்குச் செறிவூட்டும்படியாக அமைந்திருந்தன.
மேடையில் திரை நட்சத்திரங்கள் நடிகர் விக்ரம், நடிகர் சந்தானம், நடிகைகள் ப்ரியாமணி, இலட்சுமிராய் ஆகியோர் தோன்றிய போது அரங்கத்தினர் கலகலப்படைந்து, அவர்களோடு அளவளாவி மகிழ்ந்தனர்.
இரண்டாம் நாளில் இடம் பெற்ற, சிறார்களுக்கான தமிழ்த் தேனீ போட்டி, நாஞ்சில் பீற்றர் அவர்களின் இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சி, கவிஞர் தாமரையின் ‘அக்கம் பக்கம்’ எனும் தலைப்பிலான உரை, முனைவர் ஜி.விஸ்வநாதன் அவர்களது வாழ்த்துரை, தோழர் தியாகு அவர்களின் "அமுதென்று பேர்" எனும் தலைப்பிலான சிறப்புரை, முனைவர் பர்வீன் சுல்தான அவர்களது தலைமையில் இடம் பெற்ற பட்டிமன்றம் ஆகியன வெகு சிறப்பாக இருந்தன.
இரண்டாம் நாள் மாலை இடம் பெற்ற மதுரைவீரன் தெருக்கூத்துதான் இத்திருவிழாவுக்கே முக்கிய சிறப்பம்சமாகத் திகழும் வகையில் இடம் பெற்றது. அரங்கம் நிறைந்து, தமிழர்கள் தமிழ்ப் பண்பாடு காக்கும் நாட்டுப்புறக் கலையை வெகுவாக இரசித்தனர். இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து, அக்னி இன்னிசைக் குழுவினர் வழங்கிய மெல்லிசை நிகழ்ச்சி இடம் பெற்றது. தமிழ்ப் திரைப் பட புன்னணிப் பாடகர்கள் ஹரீஸ் இராகவேந்திரா, சுசீத்ரா மற்றும் நடிகர் விக்ரம் ஆகியோர் பல்வேறு பாடல்களைப் பாடி நிகழ்ச்சிக்கு மெருகூட்டினர்.
மூன்றாம் நாளான ஜூலை ஐந்தாம் தேதி, இலக்கிய வட்டம் முன்னின்று நட்த்திய இலக்கிய நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. அவ்வகையில், முனைவர் இர.பிரபாகரன் புறநானூற்று வாழ்க்கை, முனைவர் ஆறுமுகம் அவர்கள் நாட்டுப்புறக் கலைகளும் நாடகமும், முனைவர் பர்வீன் சுல்தானா அவர்கள் தமிழ் அன்றும் இன்றும், கவிஞர் தாமரை அவர்கள் தமிழ்த் திரைப்படங்களின் பொம்மைக் கதாநாயகிகள், தோழர் தியாகு அவர்களின் தமிழ் வளர்த்தன் முதலான சொற்பொழிவுகள் இடம் பெற்றன. எந்த ஆண்டிலும் இல்லாத வகையில், இலக்கிய நாளான மூன்றாவது நாளிலும் பெருமளவிலான தமிழர்கள் திரண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்..
இது தவிர, தொழில் முனைவோர் கருத்தரங்கம், மருத்துவக் கருத்தரங்கம், தமிழ் வலைப்பதிவர்கள் கூட்டம், இளைஞர் கூட்டம், தமிழ்நாட்டின் பல்வேறுபல்கலைகழகங்களின் முன்னாள் மாணவர் கூட்டம் எனப் பல நிகழ்வுகளும் முக்கிய அரங்கிற்கு வெளியே இருந்த இணை அரங்குகளில் தொடர்ந்து இடம் பெற்று வந்தன.
அந்த மூன்று நாட்களும், தரமான உணவு மற்றும் தங்குமிட வசதிகள், போக்குவரத்து, தகவல் பரிமாற்றம் முதலான அத்தியாவசியத் தேவைகளை கனெக்டிக்கெட் தமிழ்ச் சங்கத்தினர் வெகு சிறப்பாகச் செய்திருந்தனர். விழா அரங்கத்தில் இருந்து நேரடி இணைய ஒலிபரப்பும், பதிவர் பழமைபேசியின் நேரடி வர்ணனையும் உலகெங்கும் இருக்கிற தமிழர்களுக்கு, விழா குறித்த நிகழ்வுகளை உடனுக்குடன் வழங்கியதும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
அடுத்த ஆண்டுக்கான பேரவையின் தமிழ்த் திருவிழா, தென்கரோலைனா மாகாணத்தில் இருக்கும் சால்ஸ்டன் எனும் நகரில் இடம் பெறப் போவதாக பேரவையினர் அறிவித்து இருக்கிறார்கள். இவ்வாண்டைப் போலவே, அடுத்த ஆண்டும் திருவிழா வெகு சிறப்பாகவும் மேன்மையோடும் கொண்டாடப்படும் என்பது திண்ணம்!!
"இந்த நாளில் நம் ஆணை செல்ல ஏற்றடா தமிழர் கொடியை..." என்ற பாவேந்தரின் வரிகளைப் போல நம்மை உணர்வுகொள்ள வைத்து நம் தமிழர் உரிமைகளைக் காக்கப் போராடும் மன வலிவினைத் தந்த பேரவையின் விழா என்றும் சிறந்திருக்கட்டும்!
செந்தமிழால் சேர்ந்திணைவோம்! செயல்பட்டே இனம் காப்போம்!!

|