மலேயாவில் இருக்கும் பினாங்கு மாகாண துணை முதல்வரும் பேராசிரியருமான முனைவர் இராமசாமி அவர்கள், மலேய நாட்டின் இரண்டாவது பெரியதுமான ‘பெரா’ மாகாணத்தில், தமிழ்நாட்டில் இருந்து புலம் பெயர்ந்த பழனிசாமி – பழனியம்மாள் இணையருக்கு 1949ஆம் ஆண்டு மகனாகப் பிறந்தவர். எட்டுப் பிள்ளைகளுள் ஒருவராகப் பிறந்திருந்தாலும், படிப்படியாக உயர்நிலைக் கல்வியைக் கற்றுத் தேர்ந்த இவர் நியூசிலாந்தில் இதழியல் துறையில் பட்டயமும், இந்தியானா பல்கலைக்கழகத்தில் இளங்கலை, மோன்ட்ரியாலில் முதுகலை, மலேயாவில் ஆராய்ச்சியை முடித்து முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.
மலேசியா, செர்மனி, சிங்கப்பூர் முதலான நாடுகளில் அரசியற்துறைப் பேராசிரியராகப் பணியாற்றிய இவர், ஐக்கிய நாட்டு சபையின் தொழிலாளர்துறைக் கல்வி ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். அனைத்துல தொழிலாளர் அமைப்பின் ஆலோசகராகவும் இருந்துள்ளார். ஈழத்தமிழர்களின் அரசியல் மற்றும் தனிமனித உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த இவருக்கு, இலங்கையின் முன்னாள் பிரதமர் இரணில் விக்கிரமசிங்கே, அமைச்சர் பேராசிரியர் G.L.பீரிஸ் முதலானோர் ஆதரவும் கிட்டியது. தொடர்ந்து தமிழர் உரிமைகளுக்கான மாநாடுகள், மேம்பாட்டு நடவடிக்கைகள் ஆகியவற்றை உலகளாவிய அளவில் கட்டமைத்து வருகிறார்.
தற்போது அவர், ஒருங்கே மலேசியப் பாராளுமன்ற உறுப்பினராகவும் பினாங்கு மாகாண அவை உறுப்பினராகவும் இருந்து வருகிறார். மாகாண அவை உறுப்பினர் தேர்தலில் அப்போதைய முதலமைச்சரைத் தோற்கடித்த இவர் மாகாண துணை முதல்வராகப் பணியாற்றி வருகிறார். மலேசிய மாகாணங்களில் இது வரையிலும் எந்த இந்திய வம்சாவழியினரும் துணை முதல்வராக இருந்ததில்லை. இவர்தான் முதல் துணை முதல்வராவார்.
உலகத் தமிழ் உரிமைகளுக்காகப் பன்னாட்டு அரங்கில் தொடர்ந்து குரல் கொடுத்து பணியாற்றி வரும் இவர்தம் வருகை வெள்ளி விழாவுக்குச் சிறப்புச் சேர்க்கும் என்பது திண்ணம்.
